Thursday, March 31, 2011

அறிவாலயத்தில்  நடந்த இணைப்பு விழா

கடந்த பிப்ருவரி மாதம் பதினோராம் தேதி அறிவாலயத்தில் நடந்த இணைப்பு விழாவில் நானும் முன்னாள் பா. ஜ. க. மாநில தலைவர் டாக்டர்  எஸ். பி. கிருபாநிதியும் கவிஞர் காசி முத்து மாணிக்கமும் முதல்வர் கலைஞர் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தோம்.    சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.  தளபதி துணை முதல்வர்  ஸ்டாலின் வரவேற்றார்.   பேராசிரியர் அன்பழகன் , ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்  , நேரு , வேலு முதலான அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.

முப்பதாண்டுக்கு மேலான பா. ஜ. க.வுடன் ஆன தொடர்பை துண்டித்துக் கொண்டு தி. மு. க. வில் இணைவது ஏன் என்பது பற்றி நான் விளக்கி பேசினேன். 
"    ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து  ஐந்தாம் ஆண்டு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவராக இந்தி எதிர்ப்பு போராட்டகளத்தில் நின்ற போது எனக்கிருந்த உணர்வு மொழி பாதுகாப்பு உணர்வு.
ஆயிரத்து தொள்ளாயிறது எழுபத்து இரண்டாம் ஆண்டு  சிந்தனை வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்றிய போது எனக்கிருந்தது தேசிய உணர்வு. .
ஆயிரத்து தொள்ளாஇரத்து எழுபத்து ஐந்தாம் ஆண்டு  அவசர நிலை பிரகடனத்துக் கெதிராக போராடியபோது எனக்கிருந்த உணர்வு ஜனநாயக பாதுகாப்பு  உணர்வு.  எழுபத்து ஏழில் நான் தஞ்சை சட்ட மன்ற ஜனதா கட்சி வேட்பாளர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பது முதல் நேற்றுவரை  முப்பதாண்டுகள்  பா. ஜ. க. வில் மாநில துணை தலைவராகவும் செய்தி தொடர்பாளராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியபோது  எனக்கிருந்த உணர்வு சமய பாதுகாப்பு உணர்வு.
வாலை நிமிர்த்த முடியும் என்று நம்பி நான் முப்பதாண்டுகள் கழித்தேன் என்று சொல்ல எனக்கே வெட்கமாக  இருக்கிறது.   ஆனால் அதற்கு முகாந்திரம் இருந்தது.
தமிழை அரசியல் சட்ட எட்டாவது ஷேடியுலில் கண்ட அனைத்து மொழிகளோடும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று எழுதியதை பிரசுரித்தார்கள். ஏற்று கொள்ள மறுத்தார்கள். .
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்கள் கனவுத் திட்டம் என்பதால் தீர்மானம் போட்டார்கள்.  ஆனால் பின்னாளில் ராமர் பாலத்துக்கு ஆபத்து என்று சொல்லி கால்வாய் திட்டத்துக்கு நீதி மன்ற தடை வாங்கினார்கள்.
அனைத்து தரப்பினரும் அர்ச்சகராக  ஆகலாம் என்ற கலைஞர் கொண்டு வந்த சட்டத்துக்கு நீதிமன்ற தடை வாங்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப் பட்டு வருவதை கண்டித்து போராடுபவர்களுக்கு  ஆதரவு தர வேண்டும் என்றேன்.  அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்லையே எப்படி ஆதரிப்பது என்றார்கள்.  
அப்போதுதான் உணர்ந்தேன்.   இவர்கள் மாற மாட்டார்கள்.  நாம் தான் தவறாக புரிந்து கொண்டு  ஏமாந்து இருக்கிறோம்.
தமிழர்களுக்கு கழகத்தை விட்டால் வேறு பாதுகாப்பு இல்லை என்பதை புரிது கொண்டு வந்திருக்கிறோம்.  தாயுள்ளத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றியுடன் பணியாற்றுவோம்.
தளபதி ஸ்டாலின் எதிரிகளால் கூட கண்ணியத்துடன் விமர்சிக்கப்படும் தலைவர்.   அவரை நான் எதிர்கால தலைமுறைத் தலைவராகத்தான் நான் பார்க்கிறேன்.  
கழகம் மேலும் வலிவு பெற உழைப்போம் என உறுதி கூறுகிறோம்.   "

முதல்வர் கலைஞர் வரவேற்று ஆசி கூறினார்.
அடுத்த நாள் முரசொலி மற்றும் தினத்தந்தி தினமலர் தினகரன் ஏடுகளில் செய்தி வந்தபோது பலர் விசாரித்தார்கள்.
அதிகமாக முயற்சி எடுத்து பிரச்சாரம் செய்யாமல்  இணைந்த பிறகு அன்போடு விசாரித்த அனவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வேறுபாடுகள் எப்படி பெரிதாகிப் போனது என்பதை வருங்காலத்தில் விளக்கமாக  விவரிக்க இருக்கிறேன் .   

--- வி.  வைத்தியலிங்கம்