.
கடந்த ஆண்டு டிசெம்பர் இருபத்து ஏழாம் தேதி தஞ்சையில்
தமிழ் அரசி திருமண மண்டபத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய மாநாடு திரு பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடந்தது
.
இந்து தமிழர் இயக்க சார்பாக நான் கலந்து கொண்டேன்.
இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைதான் விவாதப்பொருள். அநேகமாக அனைவரது கருத்துக்களும் எதிரியாக சோனியா, ராகுல், பிரியங்கா இவர்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்திய அரசும் , துரோகியாக கலைஞர் கருணாநிதியின் அரசும் அடையாளப் படுத்தப் பட்டுக் காட்டப்பட்டன.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழகத்தில் பொங்கிக் கொண்டிருந்த இந்திய அரசு எதிர்ப்பு அலைகளை தனது சாதுரியத்தால் அமைதிப் படுத்திவிட்டார் என்பதுதான் கலைஞர் மீதான குற்றச்சாட்டு.
கலைஞர் கட்டுப் படுத்தாமல் விட்டிருந்தால் ,தமிழகத்தில் கலவரம் வெடித்து , இந்திய அரசு தலை வணங்கி முள்ளி வாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.
எல்லாரது குற்றச்சாட்டும் சோனியா மத்திய அரசை பயன்படுத்தி பழி வாங்கிவிட்டார் என்பதாக இருக்கும்போது தன்னை நம்பி இருக்கும் சிறுபான்மை மாநில அரசு தனக்கு எதிராக போகுமேயானால் , ஆதரவளிக்க காத்துக் கிடக்கும் ஜே போன்ற சக்திகளை பயன்படுத்தி தன் இலட்சியத்தை நிறைவேற்றி இருப்பாரா அல்லது தமிழ் நாட்டு கலவரத்திற்கு பயந்து பழி வாங்குதலை நிறுத்தி இருப்பாரா?
வைகோவுக்கு முன்னர் நான் பேசும்போது கீழ்க்கண்ட கருத்துக்களை குறிப்பிட்டேன்.
ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் " தமிழ்த் தாயின் தலைமகன் " என்ற பெயருடன்
பிரபாகரன் படம் இடம்பெற வேண்டும். வீரம், உறுதி , கொள்கையில் பிறழாமை, தளராத நம்பிக்கை, தாய்நாட்டுப் பற்று , சுய ஒழுக்கம், நாட்டுக்காக குடும்ப பாசம் அறுத்தல் , என்ற குணங்களின் மொத்த உருவமாக அவர் எதிர்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டப்படுவார்.
ஒவ்வொரு தமிழ் குடும்பமும் " ஈழ உண்டியல்" வைத்துக் கொண்டு பழ. நெடுமாறன் போன்றோர் கேட்கும்போது உதவ வேண்டும்.
இறுதியாக இலங்கைத் தமிழர் போராட்டம் பின்னடைவிற்கு சோனியா
கும்பலே காரணம். எனவே அவர்களே தமிழர்களின் முதல் எதிரி என அறிவிக்க வேண்டும்.
எனவே இனி எதிர்காலத்தில் எந்தக் காரணம் கொண்டும் சோனியா காங்கிரசோடு ஓட்டோ உறவோ எங்களுக்கு இருக்காது என்று தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசும்
கட்சிகள் அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்காமல் , எதிரியை அடையாளம் காட்டாமல் ,
ஈழத்தில் அக்கறை காட்டி பேசுவது, எந்த விதத்திலும் பயனளிக்காது.
மாநாட்டை விட்டு வெளியே வரும்போது மனம் ஒரு நிலையில் இல்லை.
அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தபோது
தமிழகத்தில் நிலவிய மயான அமைதிக்கு எல்லாரும்தான்
பொறுப்பேற்க வேண்டும். அதிலே முதல்வர் கலைஞருக்கு முதல் பொறுப்பு.
பெரும்பாலான மதங்கள் பிராயச்சித்தம் செய்வதை ஏற்றுக் கொள்கின்றன.
காங்கிரசுக்கும் ஒன்று உண்டு. தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக
தனி ஈழம் உருவாக உதவுவோம் என்று அறிவிக்க வேண்டும். அதற்கு முதல் படியாக இந்திய அரசின் வெளி நாட்டு கொள்கையில் மாற்றத்தை அது அறிவிக்க வேண்டும்.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்காமல் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்பதுதான் பெரும்பாலான அகில இந்திய கட்சிகளின் நிலைப்பாடு.
எனவே தனி ஈழ ஆதரவை காங்கிரஸ் அறிவிக்காத வரை தமிழர்களின் எதிரி காங்கிரஸ் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கக் கூடாது.
காங்கிரசோடு கூட்டு சேர தயாராக இருப்பவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்து விட்டார் என்று குற்றம் சாட்ட எந்த தகுதியும் இருக்காது. அதில் ஜே- க்குத்தான் முதல் இடம். தேர்தலின்போது தனி ஈழம் பெற்றுத் தர மத்திய அரசு மூலமாக ராணுவத்தை அனுப்புவேன் என்று முழங்கியவர் , இன்றுவரை அவலம் தொடரும் நிலையில் அமைதி காப்பது ஏன்? அக்கறை தேர்தலோடு போய்விட்டதா? இன்று வரை பிரபாகரன் பற்றி ஒரு வார்த்தையாவது போற்றிப் பேசியது உண்டா?
கலைஞர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டகூடாது என்று யாரும் சொல்லவில்லை.
மற்றவர்கள் செய்த தவறுகளையும் நினைத்தாவது பார்க்க வேண்டாமா ?
நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் இந்திய அரசின்
துரோகத்தை சுட்டிக்,காட்டிய பிறகும் கடைசி வரை மத்திய அமைச்சரவையில்
அன்புமணி ஒட்டிக்கொண்டிருந்ததை தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டாமா ?
எந்தப் போராட்டத்திலும் சூழ்ச்சியும் துரோகமும் இணைந்தே வரும். இது உலக வரலாறு.
அதற்காக எதிரியை மறந்து விடுவதோ நம்மவர்களை குறை கூறிக்கொண்டிருபதோ
விடுதலைக்கு எந்த வகையிலும் உதவாது.
இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர் தலைவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து
எப்படி சூழ்நிலைக்கேற்ப செயல் பட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தாவது இங்கு
உள்ள தலைவர்கள் திருந்தட்டும்.