நம்பிக்கைகளை அறிவால் அளப்போம்
நம்பிக்கையின் பேரால் அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்பவர்கள் அதற்கு பக்தி என்று பெயர் இடுகிறார்கள்.
அது எங்கள் தனி உரிமை என்றும் , மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை என்றும் கட்சி பேசுகிறார்கள். உண்மைதான் . அது உங்கள் வீட்டுக்கு உள்ளே இருக்கும்வரை உங்கள் உரிமைதான்
ஆனால் வெளியே பொதுவில் எல்லோரையும் பாதிக்கும் வகையில் நம்பிக்கையின் பேரால் செய்யப் படும் காரியங்கள் எப்படி தனி உரிமை ஆகும். ?
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே எப்போதோ யாராலோ தோற்றுவிக்கப் பட்டிருக்கும். ஆதாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் காலப்போக்கில் அவை மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்க கூடும.
அவைகளை மறு பரிசீலைனை செய்யவும் மறு சீரமைக்கவும் நம்பிக்கையாளர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா ?
எந்த நம்பிக்கையாளர்கள் குழு அத்தகைய பணியில் ஈடுபட்டு இருக்கிறது?
நடைமுறைக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவதால் அந்த சம்பிரதாயங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதை தவிர எந்த சாதனையை செய்கிறார்கள்?
மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்கிற சமுதாயம் நாம் என்பது உண்மையானால் சம்பிரதாயங்களை மறு பரிசீலனை செய்தே தீரவேண்டும்.
எந்த மாற்றத்தையும் எதிர்ப்பவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். ஓரளவு பெரும்பான்மை மக்களின் கருத்தை உறுதி செய்து கொண்டு சட்டத்தின் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
அறிவியல் உண்மைகள் வெளிவர வெளிவர நம்பிக்கை நெகிழ்ந்து உண்மைகளுக்கு இடம் கொடுக்கிறது. அப்படித்தான் எத்தனையோ நம்பிக்கைகள் மாறிவிட்டிருக்கின்றன.
சமத்துவமும் சமநீதியும் இல்லாத சம்பிரதாயங்களை மறு ஆய்வு செய்ய அரசுக்கு கடமை இருக்கிறது. அரசை வற்புறுத்த பக்தர்களுக்கு உரிமை இருக்கிறது.
பக்தர்களை யார் எழுப்புவது? அதுதான் பிரச்சினை. அவர்கள் மூடப்பழக்கத்தையும் மூர்க்கத்தனமாக பின் பற்றியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால் அரசு என்ன செய்யும்?
பக்தர்களை அப்படியே வைத்திருப்பதில் ஆதாயம் அடைபவர்கள் மௌனமாக பக்தர்களை உசுப்பி விடுகிறார்கள். இவர்களும் தலையாட்டி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பக்தி என்பதற்கும் பக்தர்கள் என்பவர்களுக்கும் புது விளக்கம் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எது பக்தி என்பதில் தெளிவு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இதெல்லாம் வேண்டாத வேலை என்றுதான் சீர்திருத்தவாதிகள் ஒரேயடியாக கடவுளை மறுத்து விட்டால் என்ன என்று பரிகாரம் சொல்கிறார்கள்.
ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படை பக்தியின் பேரால் நடக்கும் அநீதிகளே.
இறைவன் ,இறைவி அல்லது இறைசக்தி ஏதேனும் ஒன்றை பக்தர்கள் நம்பி வாழ்கிறார்கள். ஆனால் சம்பிரதாயங்களை இவர்களே உருவாக்கிக்கொண்டு , ஆதாயம் அடைந்துகொண்டு , அதற்கு அவர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள. இதற்கு பெயர் பக்தியா? வாழும் உத்தியா?
அறிவால் நம்பிக்கைகளை அளக்க முடியுமா? ஏன் முடியாது? அதற்கும் ஓர் அளவுகோல் வைத்தால் முடியும்.
எந்த நம்பிக்கை பக்தனுக்கு இழப்பு ஏற்படுத்தாததோ , எது பாரபட்சம் அற்றதோ , எது சமநீதியை வலியுறுத்து கிறதோ , எது தன்மானத்தை பாதிக்காததோ அவற்றை பின்பற்றி மற்றவற்றை மறு பரிசீலனை செய்யலாமே?
நோக்கம் ஆதிக்கத்தை அகற்றுவது. ஆதிக்கத்தை அமுல்படுத்தவே சம்பிரதாயங்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிலை நாட்டுவது.
எனவே சம்பிரதாயங்களை அறிவால் அளப்போம். இழப்புகளை தடுப்போம். தன்மானத்தை இழக்க மறுப்போம். பக்தர்கள் அடிமைகள் என்ற முத்திரைகளை ,நினைவுகளை, எதிர்பார்ப்புகளை உடைப்போம்..